உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில், இரண்டு இளம்பெண்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பயங்கர கைகலப்பாக மாறிய வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

அழகு நிலையத்திற்கு வந்திருந்த கருப்பு நிற உடை அணிந்த பெண் ஒருவருக்கும், மற்றொரு பெண்ணுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ஆத்திரமடைந்த இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். ஆக்ரோஷத்தின் உச்சமாக, இருவரும் ஒருவருக்கொருவர் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு இழுத்துத் தள்ளியதால் அழகு நிலையமே போர்க்களமாக மாறியது.

 

இந்த மோதலைப் பார்த்த மஞ்சள் நிற சட்டை அணிந்த கடை ஊழியர் ஒருவர், இருவரையும் விலக்கிவிடப் போராடினார். ஆனால் ஆவேசமாக இருந்த பெண்கள் அடங்குவதாகத் தெரியவில்லை. சுமார் 4 நிமிடங்கள் நீடித்த இந்தச் சண்டையை அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்கள் திகைப்புடன் வேடிக்கை பார்த்தனர்.

இந்த வீடியோவில் இளம்பெண்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வதைக் கூடக் கண்டுகொள்ளாமல், அங்கிருந்த நபர் ஒருவர் மிகவும் கூலாக தனது செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்த காட்சி சமூக வலைதளங்களில் கிண்டலுக்குள்ளாகி வருகிறது. “ஊரே இடிந்து விழுந்தாலும் நான் போன் பார்ப்பதை விடமாட்டேன்” என்பது போல அவர் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பொது இடங்களில் கண்ணியமாக நடக்க வேண்டும் என்ற விவாதத்தை இந்த வீடியோ கிளப்பியுள்ள நிலையில், லக்னோவின் இந்த ‘பார்லர் சண்டை’ தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.