மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் டைரக்டர் ஜெயன் நம்பியார் இயக்கத்தில் “விலயாத் புத்தா” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் கேரளா, மறையூர் பகுதியில் நடந்து வருகிறது.

அண்மையில் இப்படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்றில் நடித்துக்கொண்டிருந்த போது நடிகர் பிரித்விராஜுக்கு காலில் காயம் ஏற்பட்டது. உடனே அவர் கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சையானது மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் பிரித்விராஜ் தன் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது “விலயாத் புத்தா படத்தின் சண்டைக் காட்சியின் போது காயம் ஏற்பட்டது. தற்போது அறுவை சிகிச்சை முடிந்து உடல் நலம் தேறி வருகிறேன். அதோடு முழுமையாக குணமடையவும் விரைவில் செயலில் இறங்கவும் வலியுடன் போராடுவேன் என உறுதியளிக்கிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.