மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பாட்டீல் எஸ்டேட் பகுதியில், காரை ஓரமாக எடுப்பது தொடர்பான மிகச் சாதாரண தகராறில், பிரபல ரவுடி ஒருவன் நடுரோட்டில் ஆயுதத்துடன் ரகளையில் ஈடுபட்டு பொதுமக்களை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டீல் எஸ்டேட் பகுதியின் இந்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தெருவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை ஓரமாக எடுக்குமாறு அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜூனி ராஜ்சிங் யுவராஜ் சிங் என்ற பிரபல குற்றவாளி, கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தியை எடுத்து எதிரிலிருந்தவரைத் தாக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு திரண்ட தைரியமான சில பெண்கள், அந்த ரவுடியை மடக்கிப் பிடித்து அவனது கையில் இருந்த ஆயுதத்தைப் பறித்து தர்மஅடி கொடுத்தனர்.

 

ஆயுதம் பறிபோன பிறகும் அடங்காத அந்த ரவுடி, “நான் தான் இந்த ஏரியா பாய் (Rowdy)… நான் என்ன சொல்றேனோ அதைத்தான் இங்க இருக்கிறவங்க கேக்கணும்” என்று பொதுமக்களைப் பார்த்து உரத்த குரலில் மிரட்டல் விடுத்து நடுரோட்டில் பெரும் கூச்சலிட்டுள்ளான். இதனால் அந்த வழியாகச் சென்ற பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பயந்து சிதறி ஓடினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் கடுமையான பதற்றமான சூழல் நிலவியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில், கட்கி காவல் நிலைய போலீஸார் ரவுடி ஜூனி ராஜ்சிங் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அந்த ரவுடியைத் தேடும் பணியிலும், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளிலும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.