பெங்களூரைச் சேர்ந்த ‘புரொடெக்ட் மீ வெல்’ நிறுவனத்தின் சிஇஓ சுமித் ரமணி, தான் விமான நிலையத்தில் கண்ட ஒரு வினோதமான சம்பவத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், விமான நிலைய ஊழியர்களின் உதவியுடன் சக்கர நாற்காலியில் லவுஞ்ச் பகுதிக்கு அழைத்து வரப்பட்டார்.

ஆனால் உள்ளே வந்த அடுத்த நிமிடம், அவர் சக்கர நாற்காலியில் இருந்து மிகச் சாதாரணமாக எழுந்து, தான் அணிந்திருந்த ஹீல்ஸ் செருப்புடன் விறுவிறுவென நடந்து சென்று பிளேட் நிறைய உணவுகளை எடுத்துக்கொண்டு திரும்பியுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சுமித் ரமணி, “யாரையும் தவறாக எடை போட நான் விரும்பவில்லை, ஆனாலும் இது ஆச்சரியமாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து பலவிதமான கருத்துகள் எழுந்துள்ளன.

“வயதானவர்கள் நீண்ட தூரம் நடக்க முடியாது என்பதால் வீல் சேர் பயன்படுத்துவதில் தவறில்லை” என ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவிக்கின்றனர். அதே சமயம், “இலவசமாக கிடைக்கும் வசதியை பலரும் தவறாகப் பயன்படுத்துகின்றனர், இது உண்மையிலேயே தேவைப்படுபவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என மற்றொரு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க அபராதம் விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது.