கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வங்கதேசத்தில் நடைபெற்ற அரசியல் மாற்றத்திற்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா தொடர்புடையதென தற்போது உறுதிப்படுத்தும் வகையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த அமைப்பின் மூத்த கமாண்டராக இருந்த முஸம்மில் ஹாஷ்மி, பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது, “நாங்கள் கடந்த ஆண்டு மோடிக்கு எதிராக வங்கதேசத்தில் வெற்றி பெற்றோம். ஹசீனா அரசை நாங்கள் வீழ்த்தினோம். இதை மோடி நன்கு அறிவார்” என கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளமான X-இல் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த தகவல் வங்கதேச அரசியல் மற்றும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இடஒதுக்கீடு குறித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பலர் சிறைபோனதோடு, சிலர் அறியப்படாத துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக அந்த நேரத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் தற்போது முசாமில் ஹாஷ்மியின் விளக்கம், அந்த நாட்களில் நடந்த நிகழ்வுகள் வெளிநாட்டு சதித் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம், அப்போது ஆட்சி செய்த அவாமி லீக் கட்சி கூறியிருந்த வெளிநாட்டு தலையீடு குறித்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

 

இந்த உரையின் அடிப்படையில், பாதுகாப்பு நிபுணரும், முன்னாள் உளவுத்துறை அதிகாரியுமான அமினுல் ஹக், “முன்னதாக நடந்த போலீசாரின் படுகொலை, அரசுக் கட்டடங்களை எரித்தல், மற்றும் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் அனைத்தும் திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல்களாக இருந்திருக்கலாம். இந்த விஷயம் தற்போது உறுதி செய்யப்படுகிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், வங்கதேச காவல்துறையின் செய்தித் துறை இதுபற்றிய பதிலை வழங்க மறுத்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு மிக முக்கியமானது என இந்தியா கருதும் நிலைமை உருவாகியுள்ளது. ஏனெனில், வங்கதேசத்தின் முன்னாள் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தவர். அவரை குறிவைத்து ஆட்சியிலிருந்து வெளியேற்ற பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டுள்ளதென்பது உறுதி செய்யப்படும்பட்சத்தில், இது இந்தியா–பாகிஸ்தான் மற்றும் இந்தியா–வங்கதேசம் இடையேயான உறவுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும். இதனைக் கண்டித்து இந்தியா கடும் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.