போலந்து நாட்டு ரயில் நிலையம் ஒன்றில் 5 வயது சிறுமி ஒருவர் தனது வாழ்க்கையின் மிக கொடூரமான மற்றும் பயங்கரமான சில நொடிகளை எதிர்கொண்ட நெஞ்சை உலுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் தனது 5 வயது பெண் குழந்தையை முதலில் கீழே இறக்கிவிட்ட தந்தை, ரயிலுக்குள் இருக்கும் தங்களது மீதமுள்ள லக்கேஜ்களை எடுப்பதற்காக மீண்டும் உள்ளே சென்றுள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக ரயிலின் கதவுகள் தானாகவே திடீரென மூடிக்கொள்ள, விநாடி நேரத்தில் அந்த ரயில் குழந்தையை பிளாட்பாரத்திலேயே தவிக்க விட்டுவிட்டு வேகமாகப் புறப்படத் தொடங்கியுள்ளது.

​தன் கண் முன்னே தந்தை இருக்கும் ரயில் நகர்வதைப் பார்த்த அந்த சிறுமி, பயத்தில் கதறி அழுதபடி ரயிலின் பின்னாலேயே ஓடிய காட்சி பார்ப்பவர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. ஒரு கட்டத்தில் ரயிலைப் பிடிக்க முடியாது என்று தெரிந்ததும், அந்த பச்சிளம் குழந்தை நடுரோட்டில் தவிப்பது போல் பிளாட்பாரத்தில் அழுதுகொண்டே நின்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக, அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு விழிப்புணர்வுள்ள பயணி உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுக்க, விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் அந்த பயந்து நடுங்கிய சிறுமியைப் பாதுகாப்பாக மீட்டு, அடுத்த ரயில் நிலையத்தில் அவளது பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.