ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் இதன்மூலமாக வழங்கப்பட்டு வருவதால் ரேஷன் கார்டு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. எனவே இது அனைவரிடமும் இருக்க வேண்டியது அவசியம்.

இந்நிலையில் நிரந்தரமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் ரேஷன் கார்டு இல்லாதோரும், தற்காலிகமாக புலம்பெயர்ந்தோர் அவரது சொந்த மாநிலத்தில் ரேஷன் அட்டை இல்லாதோரும் eShram என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். புதிய கார்டு பெற்றவுடன் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.