தலைநகர் டெல்லி சேர்ந்த தரம்வீர் என்பவர் ஒரு பெண்ணை 70 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். அதன் பின் அவரை திருமணம் செய்து கொண்ட தரம்வீர் சில தினங்களிலேயே அந்த பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு சடலத்தை காட்டில் வீசியுள்ளார். இவருக்கு இந்த கொலை சம்பவத்தில் உறவினர்களான சத்தியவான் மற்றும் அருண் உதவியுள்ளனர்.

இந்நிலையில் காவல்துறையினருக்கு பெண்ணின் சடலம் பற்றி புகார் வர விசாரணை மேற்கொண்டதில் ஆட்டோ ரிக்ஷா ஒன்று சடலத்தின் அருகே வந்து சென்றது தெரியவந்துள்ளது. பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் ஆட்டோ ரிக்ஷாவில் எண்ணை கண்டுபிடித்தவர்கள் ஆட்டோ உரிமையாளர் அருண் என்பதை தெரிந்து கொண்டனர். அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது இறந்து போன பெண்ணின் பெயர் ஸ்வீட்டி என்றும் அவர் அடிக்கடி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று அங்கு மாதக்கணக்கில் தங்கியதால் ஆத்திரமடைந்த அவரது கணவர் தரம்வீருடன் இணைந்து மூன்று பேராக கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.