சமூக வலைதளத்தில் வெளியான ஒரு காணொளி, பெட்ரோல் பங்கில் நடக்கும் ஏமாற்று வேலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட அந்த வீடியோவில், ஒரு நபர் தனது இருசக்கர வாகனத்தில் 500 ரூபாய்க்கு பெட்ரோல் போடச் செல்கிறார். ஆனால், அங்குள்ள ஊழியர் மெஷினில் எண்களை அழுத்தி, 405 ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோல் போடுகிறார். மெஷினின் திரையில் “405” என்று காட்டும்போது, ஊழியர் வாடிக்கையாளரை திசைதிருப்ப முயற்சிக்கிறார். ஆனால், அந்த நபர் திரையில் 405 என்று காட்டுவதை கவனித்து விடுகிறார். இதனிடையே தனது கேமராவை ஆன் செய்து முழு சம்பவத்தையும் பதிவு செய்துகொண்டிருந்தார்.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனை டேக் செய்தார். இதற்கு பதிலளித்த இந்தியன் ஆயில், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தது. பின்னர், அந்த நபர் மீண்டும் அதே பெட்ரோல் பங்கிற்கு சென்றபோது, அங்குள்ள நிர்வாகி மன்னிப்பு கேட்டு, இனி இப்படி நடக்காது என்றும், அந்த ஊழியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
