கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ஒரு பொறியியல் மாணவர், தனது 2002 மாடல் பழைய ஹோண்டா சிட்டி காரை வெறும் 70 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். ஆனால், அதில் அவர் செய்த கைவரிசைதான் இப்போது அவரைச் சிக்கலில் தள்ளியுள்ளது.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களுக்காக அந்த மாணவர் தனது காரை ‘பங்கர்’ (Banger) எனப் பெயரிட்டு, அதன் சைலன்சரில் இருந்து தீப்பிழம்புகள் (Fire Spitting) வெளியேறுவது போலவும், காது கிழிக்கும் வகையில் அதிக சத்தம் எழுப்புவது போலவும் உருமாற்றியுள்ளார்.

இந்த காரை எடுத்துக்கொண்டு பெங்களூருவின் பாரதிய சிட்டி (Bharatiya City) பகுதிக்கு புத்தாண்டு கொண்டாட வந்துள்ளார். நடுக்கடலில் கப்பல் செல்வது போல ரோட்டில் நெருப்பைக் கக்கிக்கொண்டு கார் சென்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இதனைப் பார்த்த பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், ஹென்னூர் போக்குவரத்து போலீசார் காரைப் பறிமுதல் செய்தனர். பின்னர் எலஹங்கா ஆர்.டி.ஓ (RTO) அதிகாரிகள் காரைப் பரிசோதித்து, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் பல்வேறு விதிமீறல்களுக்காக அந்த மாணவருக்கு ரூ. 1,11,500 அபராதம் விதித்தனர்.

காரின் விலையை விட அபராதத் தொகை அதிகம் என்பதுதான் இங்கே ஹைலைட்! “ரீல்ஸ் மோகத்தால் கையில் இருந்த பணத்தை அபராதமாகக் கட்டிவிட்டு, இப்போது அந்த மாணவர் தலையில் கை வைத்து உட்கார்ந்துள்ளார்” என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.