தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் என்ற பகுதியிலிருந்து ராமநாதபுரம் வரை வாரந்தோறும் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சேவையை தற்போது ஜூன் மாதம் வரை நீட்டித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவு தெரிவித்துள்ளது. அதன்படி செகந்திராபாத்-ராமநாதபுரம் ரயில் சேவை மார்ச் 1-ஆம் தேதி முதல் ஜூன் 28-ஆம் தேதி வரையும், ராமநாதபுரம்- செகந்திராபாத் ரயில் சேவை மார்ச் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை தோறும் இரவு 9.10 மணி அளவில் செகந்திராபாத்தில் இருந்து கிளம்பும் ரயில் மறுநாள் இரவு 10.30 மணிக்கு ராமநாதபுரத்தை சென்றடையும்.

இதனையடுத்து மறு மார்க்கத்தில் காலை 9.50 மணி அளவில் ராமநாதபுரத்தில் இருந்து கிளம்பும் ரயில் பகல் 12:50 மணிக்கு செகந்திராபாத்தை சென்றடையும். இந்த ரயில் சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிரம்பட்டிணம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, மானாமதுரை மற்றும் சிவகங்கை ஆகிய வழித்தடங்கள் வழியாக இயக்கப்படுகிறது. மேலும் இந்த ரயில்களுக்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை அதாவது இன்று முதல் தொடங்குகிறது.