தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான (U-19) ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில், இந்திய அணியின் இளம் கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி ரன் மழையை பொழிந்து சாதனை படைத்தார்.

டாஸ் வென்று முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, ஜேசன் ரோவல்ஸின் (114 ரன்கள்) அதிரடி சதத்தின் உதவியுடன் 49.3 ஓவர்களில் 245 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய கிஷன் குமார் சிங் 4 விக்கெட்டுகளையும், ஆர்.எஸ். அம்பரிஷ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி எதிரணியை கட்டுப்படுத்தினர். தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி “புயல்” வேகத் தொடக்கத்தை அளித்தார்.

“>

 

வெறும் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்திய அவர், ஒட்டுமொத்தமாக 24 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் இணைந்து நிதானமாக ஆடிய ஆரோன் ஜார்ஜ் 20 ரன்களில் வெளியேறினார். மழையினால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி மாற்றியமைக்கப்பட்ட இலக்கான 174 ரன்களை, இந்திய அணி 23.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.