சென்னை மாவட்டத்தில் உள்ள மாங்காடு அம்பாள் நகர் பகுதியில் நித்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் தோழியான ரோகிணியும் அம்பத்தூரில் இருக்கும் தனியார் வங்கியில் கடன் வழங்கும் பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் நித்யா அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து இருவரும் மொபட்டில் அம்பத்தூரில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தனர். இந்நிலையில் வானகரம் சிக்னல் அருகே சென்றபோது அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த நித்தியா மற்றும் ரோகிணி மீது லாரியின் சக்கரங்களில் ஏறி இறங்கியது.

இந்த விபத்தில் நித்யாவின் இரண்டு கால்கள் படுகாயமடைந்த நிலையில், ஒரு கால் அதே இடத்தில் துண்டானது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நித்யா மற்றும் ரோகிணி ஆகிய இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு ஆபரேஷன் மூலம் டாக்டர்கள் நித்யாவின் மற்றொரு காலை அகற்றி விட்டனர். இதனை அடுத்து நேற்று சிகிச்சை பலனின்றி நித்யா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ரோகிணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கண்டெய்னர் லாரி டிரைவரான மோகன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.