தூத்துக்குடி மாவட்டம் முக்காணி குருவித்துறை பகுதி சேர்ந்தவர் பொங்கல்ராஜ்(43). இவர் கடந்த மாதம் முத்தையாபுரம் பகுதியில் உள்ள மதிக்கட்டான் ஓடை அருகே வைத்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய போது முன்விரோதத்தின் காரணமாக பொங்கல்ராஜ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

கொலை செய்தவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்திய போது குருவித்துறை பகுதியை சேர்ந்த புலமாடமுத்து(32), ஜெயராஜ்(21) மற்றும் நாகராஜன்(19) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து பொங்கல்ராஜை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. எனவே மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு  எஸ்.பி மாவட்ட கலெக்டரிடம்  பரிந்துரை செய்துள்ளார்.

கலெக்டர் உத்தரவின் பெயரில் 3 வாலிபர்களையும் நேற்று முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 5 மாதங்களில் மட்டுமே தூத்துக்குடி மாவட்டத்தில் 54 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.