ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுலா விசா பெற்று ஒரு மாதம் தங்கிவிட்டு, ஒரு வாரத்திற்கு முன்புதான் தாயகம் திரும்பிய அஸ்வினி என்கிற ஆசு பாட்டியா, ஒரு மளிகைக் கடையில் நெய் மற்றும் தேன் பாட்டில்களைத் திருடி போலீசாரிடம் சிக்கியுள்ளார். ரயில்வே சாலையில் உள்ள தனியார் ஸ்டோரில் நுழைந்த அவர், சுமார் 2,500 ரூபாய் மதிப்புள்ள பசு நெய், தேன் பாட்டில் மற்றும் கெட்ச்அப் உள்ளிட்ட பொருட்களைத் தனது பேன்ட்டுக்குள் ரகசியமாக மறைத்து வைத்துள்ளார். வெறும் ஒரு மேகி பாக்கெட்டுக்கு மட்டும் பில் போட முயன்றபோது, ஏற்கனவே சிசிடிவி மூலம் அவரை கண்காணித்து வந்த ஊழியர்கள், கையும் களவுமாகப் பிடித்து அவரது பேன்ட்டில் இருந்த பொருட்களை உருவி எடுத்தனர்.

​ஏற்கனவே மூன்று முறை இதே கடையில் டீ தூள் மற்றும் பொருட்களைத் திருடியது சிசிடிவியில் பதிவாகியிருந்ததால், ஊழியர்கள் இவரைப் பிடிக்கக் காத்திருந்தனர். “ஏன் இப்படிச் செய்கிறாய்?” என்று கேட்டதற்கு, “நேரம் சரியில்லை” என்று கூலாகப் பதிலளித்த அந்த ஆசாமியை ஊழியர்கள் வீடியோ எடுத்து போலீசில் ஒப்படைத்தனர். வெளிநாடு வரை சென்று வந்த ஒருவர், ஒரு மளிகைக் கடையில் சிறுபிள்ளைத்தனமாகப் பொருட்களைத் திருடி மாட்டியிருப்பது அந்தப் பகுதியில் பெரும் சிரிப்பலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.