கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுரகி மாவட்டத்தில் நடந்த ஒரு கொலை குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பின்னர் தான் அது ரீல்ஸ் என்பது தெரியவந்தது. அதாவது வாலிபர் ஒருவர் மற்றொரு வாலிபரை சுத்தியலால் அடித்து கொலை செய்வதும் பின்னர் அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பதும் போன்ற காட்சிகள் வைரலானது. அந்த வாலிபரைக் கொன்ற பிறகு கொலைகாரன் அவருடைய வயிற்றின் மீது அமர்ந்து கத்துகிறார். இந்த காட்சிகள் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அந்த விசாரணையில் அப்படிப்பட்ட எந்த ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பது தெரியவந்தது. அதோடு வாலிபர்கள் இருவர் கொலை செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் வைரலான வீடியோவை வைத்து வாலிபர்கள் இருவரையும் போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சச்சின் (30), சாய் பன்னா (33) என்பது தெரிய வந்தது. மேலும் இளைஞர்கள் மத்தியில் நாளுக்கு நாள் ரீல்ஸ் மோகம் என்பது அதிகரித்து வரும் நிலையில் சிலர் சமூக வலைதள புகழுக்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்லும் நிலைக்கு சென்று விட்டனர். இதனால் பல நேரங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படுகிறது. இது குறித்த செய்திகளும் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் ஆபத்தை உணராமல் தொடர்ந்து இளைஞர்கள் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.