ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 29 வயதுடைய பட்டதாரி வாலிபர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த வாலிபருக்கு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 21 வயது பட்டதாரி பெண்ணுடன் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது. நேற்று காலை ஒரு கோவிலில் வைத்து இவர்களது திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக இரு வீட்டு உறவினர்களும் கோவிலுக்கு சென்றனர்.

இந்நிலையில் மாலை மாற்றுதல் உள்ளிட்ட சடங்குகள் நடந்து முடிந்த பிறகு மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்ட முயன்றார். அப்போது திடீரென மணப்பெண் அந்த தாலியைப் பறித்து கையில் வைத்துக் கொண்டதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண் விடாப்படியாக தாலியை உண்டியலில் தான் போடுவேன் என கூறியதால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அந்த பெண் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை எனக் கூறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் உனது சம்மதத்தோடு தானே எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்றது. அப்போது கூறாமல் முகூர்த்த நேரத்தில் ஏன் இப்படி செய்கிறாய்? என கேட்டார். அதற்கு மணப்பெண் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை; எனது பெற்றோர்தான் ஏற்பாடு செய்தார்கள் என கூறியதால் அங்கிருந்த உறவினர்கள் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து “திருமண ஏற்பாடுகளுக்கு மூன்று லட்ச ரூபாய் செலவு ஆகியது. மேலும் மன உளைச்சல் ஏற்பட்டதால் மணப்பெண், அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மணமகன் புகார் அளித்துள்ளார். மாறாக மணப்பெண் “எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை; எனது பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் தான் சம்மதம் தெரிவித்தேன் என புகார் அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.