நெல்சன் திலீப் குமார் டைரக்டில் ரஜினி இப்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் நடிக்கின்றனர். ரஜினியின் 169-வது திரைப்படமான ஜெயிலர் படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வந்த நிலையில், அண்மையில் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இதையடுத்து ரஜினியின் 170-வது படத்தை “ஜெய் பீம்” பட டைரக்டர் டி.ஜே. ஞானவேல் இயக்க உள்ளார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கக்கூடிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 170 என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் ரஜினி ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும், போலி என்கவுண்டர்களுக்கு எதிரான கதைக்களத்தில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தில் பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி, ரஜினிக்கு இணையாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகர்களை தேர்வு செய்து வைத்த நிலையில் இப்போது இந்த கேரக்ட்டில் அமிதாப் பச்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியில் 1991-ம் வருடம் வெளியாகிய “ஹும்” திரைப்படத்திற்கு பின் ரஜினியும் அமிதாப் பச்சனும் இணைந்து நடிக்க உள்ளதாக வெளியாகிய தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.