சீனாவின் புகழ்பெற்ற ஷாவோலின் கோவிலில், பல நூற்றாண்டுகள் பழமையான குங்ஃபூ பாரம்பரியத்துடன் நவீன தொழில்நுட்பம் கைகோர்த்துள்ள ஆச்சரியமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஷாங்காயைச் சேர்ந்த ‘அகிபாட்’ என்ற நிறுவனம் தயாரித்த மனித உருவிலான ரோபோக்கள் அங்குள்ள புத்த துறவிகளுடன் இணைந்து குங்ஃபூ பயிற்சியில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் துறவிகளின் நுணுக்கமான உடல் அசைவுகள் மற்றும் தற்காப்புக் கலை முறைகளை இந்த ரோபோக்கள் மிகத் துல்லியமாகப் பின்பற்றிச் செய்வது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காட்சிகள் பாரம்பரியத்திற்கும் அதிநவீன செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான ஒரு விசித்திரமான பாலமாகப் பார்க்கப்படுகிறது.

“>

மேலும் கடினமான ஆன்மீக ஒழுக்கம் மற்றும் உடல் உழைப்பைக் கோரும் இந்த புனிதக் கலையை இயந்திரங்கள் பயில்வது பலருக்கு ஆச்சரியத்தைத் தந்தாலும், எதிர்காலத்தில் தொழில்நுட்பம் கலாச்சாரத் தளங்களிலும் எந்த அளவிற்கு ஊடுருவும் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது. இந்த ரோபோக்களின் நேர்த்தியான செயல்பாடு சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியின் மைல்கல்லாகக் கருதப்பட்டாலும், “இயந்திரங்கள் மனித உணர்வுகளை மிஞ்ச முடியுமா?” என்ற விவாதத்தையும் இது கிளப்பியுள்ளது.