புதுச்சேரி மாநிலத்தில் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பயிலும் மாணவர்களுக்கு வாரம் மூன்று முட்டை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 14ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. தற்போது வகுப்புகள் தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையில் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படவில்லை.

இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு மாணவர்களுக்கு முட்டை விநியோகம் செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது. புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு அக்ஷயா பாத்திரம் என்ற தொண்டு அமைப்பு மதிய உணவை வழங்கி வரும் நிலையில் இந்த நிறுவனம் சைவ உணவுகளை மட்டுமே வழங்குவதால் ஏற்கனவே மதிய உணவு வழங்கி வந்த மத்திய சமையல் கூடங்கள் மூலம் முட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள 293 பள்ளிகளுக்கு வாரம் ஒரு லட்சத்து 56 ஆயிரம் முட்டைகள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.