தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் எனவும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதனிடையே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது குறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி ஆறு முதல் 12 ஆம் வகுப்பு ஜூன் 1ஆம் தேதியும் 1 முதல் 5ஆம் வகுப்புக்கு ஜூன் ஐந்தாம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளார்.