ஆஸ்திரியாவின் ஸ்காமிட்டென்ஹோஹி மலைப்பகுதியில், சிறிய ரக விமானம் ஒன்றும் பேராசூட் வீரரும் நடுவானில் மோதிக்கொண்ட பயங்கர விபத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த விபத்தில் பேராசூட் கிழிந்து, ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த பெண் ஒருவர் நூலிழப்பில் உயிர் தப்பியுள்ளார்.

கடந்த மே 23 அன்று, 44 வயதான சப்ரினா என்ற பெண், வடக்கு ஆஸ்திரியாவின் தெளிவான வானிலையில் பேராசூட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலை செய்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அமைதியாகப் பறந்து கொண்டிருந்த சப்ரினாவின் பேராசூட் மீது,  சிறிய சுற்றுலா விமானம் ஒன்று திடீரென மிக வேகமாக வந்து மோதியது. விமானத்தின் சிறகுகளும் இறக்கைகளும் சப்ரினாவின் பேராசூட்டை முழுமையாகக் கிழித்து எறிந்தன. இதனால் சப்ரினா நிலைதடுமாறி வானில் இருந்து அதிவேகமாக கீழே நோக்கி விழத் தொடங்கினார்.

 

பேராசூட் கிழிந்து, அதன் எஞ்சிய பாகங்கள் உடலைச் சுற்றிய நிலையிலும், சப்ரினா சாமர்த்தியமாகச் செயல்பட்டார். கீழே விழுந்து கொண்டிருக்கும்போதே, தன்னிடம் இருந்த அவசரக்கால மாற்றுப் பேராசூட்டை திறக்க அவர் தீவிரமாக முயன்றார்.

அதிர்ஷ்டவசமாக, தரையில் மோதுவதற்கு சில நொடிகள் முன்பாக மாற்றுப் பேராசூட் வெற்றிகரமாகத் திறந்தது. இதன் மூலம் மரங்களின் மீது மோதாமல் அவர் பத்திரமாகத் தரையிறங்கினார். இவ்வளவு பெரிய விபத்தில் சிக்கிய போதிலும், அவருக்கு சில சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விபத்து குறித்து சப்ரினா தனது சமூக வலைதளப் பக்கத்தில், “சில கடுமையான காயங்களைத் தவிர, எனக்கு வேறு எதுவும் ஆகவில்லை என்பதை என்னாலேயே இன்னும் நம்ப முடியவில்லை” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். விபத்துக்குள்ளான 28 வயதுடைய விமான ஓட்டியும் காயங்கள் ஏதுமின்றி பத்திரமாக இருப்பதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமானத்தின் இறக்கை மோதியதில் பேராசூட் கடுமையாகச் சேதமடைந்தது. எனினும், அந்தப் பெண் அனுபவமிக்க பேராசூட் வீரர் என்பதால், உடனடியாக மாற்றுப் பேராசூட்டைப் பயன்படுத்திப் பாதுகாப்பாகத் தரையிறங்கினார் என்று கூறப்பட்டுள்ளது.