உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், பெட்ரோல் பங்க் ஊழியர்களைக் காரால் மோதிவிட்டு, அவர்களது இருசக்கர வாகனத்தைப் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த புதனக்கிழமை இந்த சம்பவம் நடைபெறுள்ளது. புலந்த்ஷாரைச் சேர்ந்த ஹர்ஷ் (22) என்ற இளைஞர், தனது ‘தார்’ (Thar) ரக எஸ்.யு.வி காரில்ஒரு பெட்ரோல் பங்கிற்குச் சென்றுள்ளார். அங்கு எரிபொருள் நிரப்பிய பிறகு, அதற்கான பணத்தைச் செலுத்தாமல் திடீரென காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், தங்களது இருசக்கர வாகனத்தில் அந்தக் காரைத் துரத்திச் சென்றனர். ஊழியர்கள் காரை மறிக்க முயன்றபோது, ஆத்திரமடைந்த ஹர்ஷ் அவர்கள் மீது காரை மோதியுள்ளார். இதில் ஊழியர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். ஆனால், அவர்களது இருசக்கர வாகனம் காரின் அடியில் சிக்கிக்கொண்டது.

காரை நிறுத்தாமல் ஹர்ஷ் அதிவேகமாகச் சென்றதால், காரின் அடியில் சிக்கிய பைக் சாலையில் உராய்ந்து தீப்பிடித்தது. தீப்பொறி பறக்க பைக் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்ட பொதுமக்கள் கூச்சலிட்டும், அந்த இளைஞர் காரை நிறுத்தவில்லை. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தகவலறிந்து விரைந்த  மூன்று காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீஸார், சுமார் 10 கி.மீ தூரம் துரத்திச் சென்று அந்த எஸ்.யு.வி காரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் கார் ஓட்டுநர் ஹர்ஷை போலீஸார் கைது செய்து, காரைப் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது அபாயகரமாக வாகனம் ஓட்டுதல், காயம் ஏற்படுத்துதல் மற்றும் எரிபொருள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.