ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தை சேர்ந்த தம்பதி பண்டி மகவார் – ஷாலு மகவார். ஜூலை 31ஆம் தேதி தனது மனைவி காணாமல் போய்விட்டதாக பண்டி மகவார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி வியாழக்கிழமை ஒரு பெண்ணின் சடலம் ரொட்டேடா கால்வாயில் மிதப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அது  காணாமல் போன ஷாலுவாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் பண்டியை  அடையாளம் காட்ட அழைத்துள்ளனர்.

ஆனால் அவர் அது தனது மனைவி இல்லை எனக் கூறியுள்ளார். சந்தேகம் தீராத காவல்துறையினர் ஷாலுவின் சகோதரி ஜோதி என்பவரை அழைத்து அடையாளம் காட்டக் கூறிய போது அவர் இது ஷாலுதான் என கூறியுள்ளார். இதனால் காவல்துறையினரின் சந்தேகம் பண்டி மீது திரும்பி உள்ளது. அவரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி தனது தந்தை மற்றும் சகோதரரின் உதவியுடன் வீட்டிலிருந்த ஷாலுவின் தலையில் கல்லை போட்டு மூவரும் கொலை செய்துவிட்டு உடலை கால்வாயில் வீசியதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.