ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டத்தில் தெரு நாய் ஒன்று ஒரு கும்பலால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாகம் பீர்வாவ் பகுதியில் அந்த நாய் சிலரை கடித்ததாகக் கூறப்படும் நிலையில், ஆத்திரமடைந்த ஒரு கும்பல் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அந்த வாயில்லா ஜீவனை பெரிய கற்கள் மற்றும் தடிகளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

வலியால் துடித்த அந்த நாய் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைத்துள்ளது.

இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் போலீசார் வழக்குப்பதிவு (FIR No. 57/26) செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வைரல் வீடியோவில் உள்ள நபர்களை அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் விலங்குகள் மீதான வன்முறை குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.