
திருச்சி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி வசித்து வருகிறார்.கடந்த பல நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை பெரமங்கலத்தை சேர்ந்த பெ.செல்வராஜ்(55), முத்து(64), து. செல்வராஜ்(55) மற்றும் திருவெள்ளறையைச் சேர்ந்த ராம்ராஜ்(45) ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் கடந்த 2019 -ஆம் ஆண்டு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே 6 மாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு மரபணு சோதனை செய்யப்பட்டது. அதில் சிறுமியின் கர்ப்பத்திற்கு பெ.செல்வராஜ் தான் காரணம் என்பது உறுதியானது. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் செல்வராஜுக்கு 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு ஐந்து லட்சம் நிவாரணம் அரசு தரப்பில் இருந்து பெற்று தரவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்ட மற்ற மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.