திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசியில் செந்தில் பிரபு (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தச்சு தொழிலாளி. இவர் கவிதா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் செந்தில் பிரபு தினமும் மது குடித்துவிட்டு தன் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அதேபோன்று கடந்த 2-ம் தேதியும் அவர் மது போதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கவிதா (29) தன்னுடைய தாய், அக்கா மற்றும் தம்பி ஆகியோருடன் சேர்ந்து அவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அதன் பிறகு மறுநாள் காலை தன்னுடைய கணவர் மர்மமான முறையில் இறந்து விட்டதாக கவிதா நாடகமாடியுள்ளார். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் செந்தில் பிரபு கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததையடுத்து காவல்துறையினர் கவிதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் இதைத் தொடர்ந்து கவிதா, அவருடைய தாய் காசி அம்மாள், அக்கா சாந்தி மற்றும் தம்பி சந்தோஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.