மது இல்லா தமிழகம் அமைக்க வலியுறுத்தி முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சந்திக்க நேரம் கேட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்..

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எழுதிய கடிதத்தில், மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு! வணக்கம்.  பொருள் : பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தங்களை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறுகோருதல்.

ஐயா : மது இல்லாத தமிழகம் என்பது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கனவு மட்டுமல்ல. தமிழக பொது மக்களின் விருப்பமும் கூட, அதனை நிறைவேற்றிட தமிழக பாரதிய ஜனதா கட்சியானது தகுந்த ஆலோசனைகளையும் கருத்துகளையும் வகுத்துள்ளது. இதுகுறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன்.

இது தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநில துணைத்தலைவர் திரு கரு. நாகராஜன் அவர்கள் தலைமையிலான ஐவர் குழுவானது தங்களை சந்தித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திட்டத்தினை தங்களிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தி உள்ளேன். ஆகவே தாங்கள் வருகின்ற ஜூலை 11ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி அல்லது இம்மாதத்தில் ஏதாவது ஒரு தினத்தில் தங்களது பொன்னான நேரத்தை இந்த சந்திப்புக்கு ஒதுக்கி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தங்களது மேலான பதிவினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.