மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் பயணம் செய்த விமானம், பாராமதி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு முதல் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது பாராமதியில் இன்று நடைபெறவிருந்த நான்கு முக்கியப் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக அஜித் பவார் திட்டமிட்டிருந்தார். அதற்காக அவர் பயணம் செய்த விமானம், பாராமதி விமான நிலையத்தை நெருங்கியபோது எதிர்பாராத விதமாக விபத்தைச் சந்தித்தது. அவசரமாகத் தரையிறக்க முயன்றபோது இந்த விபத்து நேரிட்டதாகத் தெரிகிறது.

சம்பவ இடத்திலிருந்து வெளியாகும் காட்சிகள் விமானத்தின் சிதைந்த பாகங்கள் சிதறிக் கிடப்பதைக் காட்டுகின்றன. விபத்தில் காயமடைந்தவர்களை மீட்புப் படையினர் உடனடியாக மீட்டு, ஆம்புலன்ஸ்கள் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

விபத்து நடந்தபோது அஜித் பவார் விமானத்தில் இருந்தாரா அல்லது அவருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், உள்ளூர் தகவல்கள் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கின்றன. விமான விபத்துக்கான சரியான காரணம் குறித்து விமான போக்குவரத்துத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.