வருகிற 21-ஆம் தேதி வரை தமிழக முழுவதும் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. அதாவது போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும். கஞ்சா போன்ற போதை பொருட்களை நிரந்தரமாக தடை செய்வதற்கு சட்டம் இயற்ற வேண்டும். போதை கலாச்சாரத்தால் சீரழியும் தமிழக இளைஞர்களை பாதுகாக்க வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. அந்த வகையில் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் இந்திய மாணவர் சங்க சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமை தாங்கி முதல் கையெழுத்தை போட்டு இந்த இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது, போதை பொருட்களில் இருந்து அடுத்த தலைமுறை இளைஞர்களை பாதுகாப்பதற்காகவும் போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதற்காகவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதே போல் கஞ்சா உள்ளிட்ட புகைப் பழக்கத்திலிருந்து இளைஞர்கள் விரைவில் விடுபட வேண்டும். விற்பனை செய்பவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் அவர்களின் வங்கிக்கணக்குகளை முடக்கி இருக்கின்றோம். மேலும் போதை பொருட்களில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு காவல்துறை உதவும் இதற்கான நடவடிக்கை திருவாரூர் மாவட்ட போலீஸ் சார்பில் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.