முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி 1, 17,129 பணியாளர்களுக்கு ரூபாய் 7.01 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல் திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன.

குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் தங்கு தடை இன்றி போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணி குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிற்கிணங்க பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களில் 2022 ஆம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதமும், 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் சாதனை ஊக்கத் தொகை வழங்கப்படும்.

இந்த உத்தரவின் படி போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1,17,129 பணியாளர்களுக்கு மொத்தம் 7 கோடியே ஒரு லட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.