திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் இன்று முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் தொடக்க விழாவையொட்டி கொல்லம் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் அம்மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிந்து கிருஷ்ணா அவர்கள் கலந்து கொண்டார். விழாவைத் தொடர்ந்து, புதிய திட்டத்தை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் பிந்து கிருஷ்ணா அந்த இலவச பேருந்தில் ஏறி, பொதுமக்களுடன் இணைந்து சிறிது தூரம் பயணம் மேற்கொண்டார்.

​அமைச்சர் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த நபர் ஒருவர் அவருக்கு சுடச்சுட பாயாசம் கொடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த நபர் நிலைதடுமாறியதில், அவர் கையில் இருந்த பாயாசம் அப்படியே அமைச்சர் பிந்து கிருஷ்ணாவின் தலையில் கொட்டியது. இதனால் பேருந்துக்குள் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாயாசம் கொடுக்க வந்த இடத்தில் தவறுதலாக அது அமைச்சரின் தலையில் கொட்டப்பட்ட இந்த விசித்திரமான விபத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.