மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஒத்த ஆலங்குளத்தைச் சேர்ந்த அழகர்சாமி (51) திருமங்கலத்தில் தனியார் சேவைக்காப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது நண்பர் பொன்ராஜ் அதே ஊரில்தான் வசிக்கிறார்.

இருவரும் அதிகமாக பணம் சம்பாதிக்க ஆசைப்பட, இச்சமயத்தில் முருகேஸ்வரி என்ற பெண் இவர்களுக்கு அறிமுகமாகி, பணத்தை இரட்டிப்பாக்கி தரும் மாந்திரீக பூசாரியை தெரியுமென கூறி, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சித்தார்த்தன் (50) என்பவரிடம் அழைத்துச் சென்றார்.

முருகேஸ்வரி கூறியபடி, அவர்கள் ஆன்லைனில் ₹2.42 லட்சமும், ரொக்கமாக ₹7.42 லட்சமும், மொத்தம் ₹9.84 லட்சம் பணத்தை சித்தார்த்தனிடம் கொடுத்தனர். பின்னர், பூஜை நடைபெறும் என்று கூறிய சித்தார்த்தன், ஒரு பையை கொடுத்து பணத்தை இரட்டிப்பாக்குவதாக கூறினார்.

அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது பையில்  மல்லிகைப்பூ மட்டுமே இருந்தது. பணம் இல்லை. இதனால்  அழகர்சாமியும், பொன்ராஜும் மீண்டும் சித்தார்த்தன் வீட்டுக்கு சென்று பணம் கேட்டபோது, சித்தார்த்தன் மற்றும் அவரது மகன் விஸ்வாமித்ரன் (21) இருவரும் சேர்ந்து, அவர்கள் இருவரையும் ஒரு அறையில் அடைத்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, இருவரும் பெரியகுளம் தென்கரை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து, சித்தார்த்தன் மற்றும் அவரது மகன் விஸ்வாமித்ரனை கைது செய்தனர்.

இந்த மோசடியில் முக்கியமாக இருந்த முருகேஸ்வரியை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சித்தார்த்தன் இதுபோன்று பல மோசடிகளில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளதுடன், மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.