துபாயின் உலகப்புகழ் பெற்ற புர்ஜ் கலிஃபா கட்டிடத்தை குறிவைத்து ஈரான் ஏவிய ஏவுகணையை, ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்புப் படை நடுவானிலேயே தடுத்து அழித்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே முற்றியுள்ள மோதல் காரணமாக, துபாய் மற்றும் அபுதாபியில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. புர்ஜ் கலிஃபா அருகே வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், முன்னெச்சரிக்கையாக அந்த உயரமான கட்டிடம் காலி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், புர்ஜ் கலிஃபா நேரடியாகத் தாக்கப்பட்டது அல்லது தீப்பிடித்தது போன்ற சில வீடியோக்கள் ‘AI’ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என உண்மை கண்டறியும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே சமயம், துபாயின் பாம் ஜுமேரா மற்றும் புர்ஜ் அல் அரப் போன்ற பகுதிகளில் ஏவுகணைத் துண்டுகள் விழுந்து சிறிய அளவிலான தீ விபத்துகள் ஏற்பட்டதை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவங்களால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளதுடன், சர்வதேச அளவில் பெரும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
