லக்னோவின் ஹசரத்கஞ்ச் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மது போதையில் இருந்த காவல் துணை ஆய்வாளர் ஒருவர் பெரும் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமித் ஜெய்ஸ்வால் என்ற அந்த அதிகாரி, தனது காரை போக்குவரத்து தடுப்புகள் மீது மோதியதோடு, அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க அமைக்கப்பட்டிருந்த மாற்றுப் பாதையில் செல்ல மறுத்த அவர், உயரதிகாரியான போக்குவரத்து டிசிபி கமலேஷ் தீட்சித்திடமே தகாத முறையில் பேசி மிரட்டல் விடுத்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த மோதலுக்குப் பிறகு அமித் ஜெய்ஸ்வாலை சுற்றி வளைத்த காவல்துறையினர், அவரது காரைச் சோதனையிட்டபோது அதில் மது பாட்டில்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

“>

உடனடியாகக் கைது செய்யப்பட்ட அவரிடம் மது அருந்தியதற்கான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல் அதிகாரியே போதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, சக அதிகாரிகளிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதற்காக அவர் மீது துறை ரீதியான மற்றும் சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.