
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டம் சதார் தொகுதியில் உள்ள ஹரிகிஷன்பூர் நடுநிலைப் பள்ளியில், வெள்ளிக்கிழமை (இன்று ) மதிய உணவு விநியோகத்தின் போது அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியது. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, உணவைச் சாப்பிட்ட 20 மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர்.
குழந்தைகள் வாந்தி, வயிற்றுவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகளை காண்பித்த நிலையில், அவர்களை உடனடியாக சதார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மாணவர்களின் நிலை தற்போது ஆபத்தற்றதாக சிவில் சர்ஜன் டாக்டர் சிவகுமார் பிரசாத் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். மேலும், இது உணவு விஷபரப்பின் காரணமாக ஏற்பட்டதாகவும் கூறினார்.
இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த சுகாதாரத் துறை சிறப்புக் குழு பள்ளிக்குத் திடீர் ஆய்வு மேற்கொண்டது. சமையல் பகுதி மற்றும் மீதமுள்ள உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்குப் பெறப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில், மதிய உணவு தயாரிப்பில் மிகுந்த அலட்சியம் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் கல்வித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மேலாளர் மற்றும் சமையல் பொறுப்பாளரிடம் விசாரணை நடந்து வருகிறது. இது போன்ற பரிதாபங்கள் மீண்டும் ஏற்படக்கூடாது என்பதற்காக அனைத்து பள்ளிகளிலும் உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.