மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாயத்தான்பட்டி கிராமத்தில் வல்லடிக்கார தெய்வத்தை குலதெய்வமாக 60 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வணங்கி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி திருவிழாவில் இருந்து மூன்று நாட்களுக்கு பின் காரைக்குடியை அடுத்த கல்லல் அருகே அரண்மனை சிறுவயல் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் நீராடி ஆயுதங்களுடன் பாரி வேட்டைக்கு செல்வார்கள். அந்த வகையில் இந்த வருடமும் இந்த திருவிழா நடைபெற்றுள்ளது. இதில் 60-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த சுமார் 5000 பேர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அரண்மனைசிறுவயல் குளத்தில் நீராடிய பின் அங்குள்ள பாரிவேட்டை திடலில் கிராம அம்பலகாரர்கள் அமர்ந்து வழிபாடு நிகழ்ச்சியை நடத்தினர். அதன் பின் அவர்கள் பாரிவேட்டைக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களுடன் வேட்டைக்கு சென்றனர். அவர்களை பெண்கள் ஆரத்தி எடுத்து வணங்கி அனுப்பி வைத்தனர். தமிழ்நாடு வனத்துறை சார்பாக பாரிவேட்டைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் சம்பிரதாயத்திற்காக சிறுதூரம் சென்று அவர்கள் மீண்டும் நடந்து வந்தனர்.

இதனையடுத்து விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் அரண்மனைசிறுவயல் கிராமத்தில் இருந்து புறப்பட்டு தங்களது சொந்த கிராமத்திற்கு சென்று 15 நாட்கள் வரை விரதம் கடைபிடிப்பது வழக்கமாகும். அப்படி விரதம் இருக்கும் இந்த நாட்களில் வீடுகளில் எண்ணெய் பயன்படுத்தி சட்டியில் சமைப்பது அல்லது தாளிப்பது கிடையாது. அதேபோல் வெளியூர் பயணங்களுக்கும் அவர்கள் செல்வதில்லை என அந்த கிராம மக்கள் கூறியுள்ளனர்.