செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கொடூர் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு துரை ஜெயஸ்ரீ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஜெயஸ்ரீ கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை மேற்கொண்டு வந்தார். பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த 9-ஆம் தேதி ஜெய் ஸ்ரீ செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஜெயஸ்ரீக்கு அழகான பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது.

இந்நிலையில் குழந்தையின் இடதுகை உடைந்து பிறந்ததாகவும், வலது கை செயலிழந்த நிலையில் இருப்பதாகவும் ஜெயஸ்ரீ டாக்டர்களிடம் தெரிவித்தார். ஆனால் டாக்டர்கள் தரப்பில் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் கோபமடைந்த ஜெயஸ்ரீயின் உறவினர்கள் டாக்டர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தவறு செய்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயஸ்ரீயின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.