உத்தர பிரதேஷ் மாநிலம் கோரக்பூரில் மக்கள் பயன்பாட்டிற்காக ஒரு பிரம்மாண்டமான புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பாலம் திறக்கப்பட்டு 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சுவர்களில் குட்கா கறை படிந்துள்ளதைக் காட்டும் வீடியோ ஒன்று எக்ஸ் (X) தளத்தில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல கோடி ரூபாய் செலவில் அரசு கட்டிய பொதுச் சொத்தை, மக்கள் இப்படிப் பொறுப்பில்லாமல் பாழாக்குவதைப் பார்த்து சமூக ஆர்வலர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

​”நகரங்களை எவ்வளவு வேகமாக அரசாங்கம் கட்டினாலும், மக்கள் அதைவிட வேகமாக அதை நாசப்படுத்துகின்றனர்” என்ற வேதனையான கருத்தோடு இந்தக் காணொளி பகிரப்பட்டு வருகிறது. அடிப்படைச் சமூகப் பொறுப்பு (Civic Sense) என்பது ஒரு சதவீதம் கூட இல்லாமல் இப்படிப் பொது இடங்களை அசுத்தம் செய்வது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பாலத்தின் தூண்கள் மற்றும் சுவர்களில் துப்பப்பட்டுள்ள அந்தக் கறைகள், நம் சமூகத்தின் விழிப்புணர்வு எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் கண்ணாடி போலக் காட்டுகிறது.