பெண்களுக்கு அவர்களின் பாதுகாப்பு என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், ரயில் நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருக்கும் ஒரு நபர், ரயிலுக்குள் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்து மிகவும் அநாகரீகமான முறையில் சைகை செய்வதும், அவரை அசௌகரியப்படுத்தும் வகையில் நடந்து கொள்வதும் பதிவாகியுள்ளது. அந்த நபர் தொடர்ந்து அப்பெண்ணையே வெறித்துப் பார்த்துக் கொண்டு, எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுவது பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கிறது.

அந்த நபரின் அத்துமீறலைக் கண்டு அஞ்சாமல், ரயிலுக்குள் இருந்த பெண் தனது குரலை உயர்த்தி அந்த நபரை தட்டிக்கேட்கிறார். “ஆண்களின் இத்தகைய செயல்களை வீடியோ எடுக்காதீர்கள், அப்படி எடுத்தால் அவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று ஒரு தரப்பு கூறுகிறது. ஆனால், பட்டப்பகலில் பொது இடத்தில் பெண்களுக்குத் தொல்லை தரும் இவர்களைத் தடுக்க சட்டம் என்ன செய்கிறது?” என்ற கேள்வியுடன் இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டுள்ளது.

@TARUNspeakss என்ற எக்ஸ் தள பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 71,000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் இன்னும் சரியாகத் தெரியவில்லை என்றாலும், வீடியோவைப் பார்த்த பயனர்கள் அந்த நபரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் பெண்களுக்கு எதிரான இத்தகைய அத்துமீறல்கள் பொது இடங்களில் அதிகரிப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.