மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் நிகழ்ந்த சொகுசு படகு விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. சுற்றுலாவுக்காக சுமார் 40 பேருடன் சென்ற அந்த படகு நடுநீரில் கவிழ்ந்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 28 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மாயமான சிலரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சுமார் 14 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்புக் குழுவினர் படகின் இடிபாடுகளுக்கு இடையே சென்றபோது, டெல்லியைச் சேர்ந்த ஜூலியஸ் மெஸ்ஸி மற்றும் அவரது கைக்குழந்தை சியா மெஸ்ஸி ஆகியோரின் உடல்கள் ஒன்றாகக் கண்டெடுக்கப்பட்டன.
மரணத்தின் விளிம்பிலும் தனது குழந்தையைத் தாய் ஜூலியஸ் மார்போடு அணைத்தபடி இருந்த உருக்கமான காட்சி, கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
இந்த விபத்திற்கு அதிகாரிகளின் அலட்சியமே முக்கிய காரணம் எனப் உயிர் தப்பியவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். படகில் இருந்த பயணிகளுக்குப் பாதுகாப்பு கவச உடைகள் (Life Jackets) வழங்கப்படவில்லை என்றும், அவை பூட்டிய அறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், அனுபவம் இல்லாத ஓட்டுநர், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியது மற்றும் மோசமான வானிலையிலும் படகை இயக்கியது போன்ற விதிமீறல்களே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன.
ஆக்ராவிலிருந்து வந்த சிறப்பு மீட்புக் குழுவினர் கடும் சவால்களுக்கு இடையே படகின் பாகங்களை உடைத்து உடல்களை மீட்டுள்ளனர். லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பயணிகளின் பாதுகாப்பைத் தாரை வார்த்த இந்தச் சம்பவம், தற்போது நிர்வாகத்தின் மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
