பாஜகவுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி என்பது வரும் 11ம் தேதி தெரியும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு பாஜக வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலை எந்த கூட்டணி கட்சிகளோடு தேர்தலை சந்திப்பார்கள் என்பது அனைவரது கேள்வியாக இருந்து வருகிறது. இதற்கிடையே இன்றைய தினம் சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பாஜக தேர்தல் அலுவலக கட்டட திறப்பு  நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்று இருந்தார்.

பாஜக தேர்தல் அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தபின் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக கூட்டணி தொடர்பாக 11ஆம் தேதி தெரியவரும் என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலை கூறியதாவது, பாஜகவுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைப்பது தொடர்பாக வரும் 11ஆம் தேதி தெரியவரும். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் சென்னை வருகையின் போது பாஜக கூட்டணி குறித்த அந்த தெளிவு கிடைக்கும்.

அதே போல தமிழகத்தை பொறுத்தவரை எப்போது வேண்டுமானாலும் கூட்டணி மாறும். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் இருக்கும் திமுக கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தவிக்கிறது என்றும் விமர்சித்துள்ளார்.