பாகிஸ்தானில் தற்போது நிலவி வரும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, அந்நாட்டின் பிரபலமான பிஎஸ்எல் (PSL 2026) டி20 கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்களே இல்லாமல் வெறிச்சோடிய மைதானங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் பயணம் செய்ய வேண்டாம் என அரசு அறிவுறுத்தியதால், ரசிகர்களுக்கு மைதானத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

ஆனால், மைதானத்தில் சாதாரண ரசிகர்களுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளும், விஐபிகளும் மட்டும் ஜாலியாக அமர்ந்து போட்டியை ரசிப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

“மக்களுக்கு ஒரு நீதி, மந்திரிமார்களுக்கு ஒரு நீதியா?” என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் அரசை வறுத்தெடுத்து வருகின்றனர்.

எரிபொருள் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றிவிட்டு, செல்வாக்கு படைத்தவர்கள் மட்டும் மைதானத்திற்குள் வலம் வருவது பாகிஸ்தானின் அப்பட்டமான ‘விஐபி கலாச்சாரத்தை’ காட்டுவதாகப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.