பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேக திருவிழா நடைபெறும் நிலையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் மதுரை- பழனி மற்றும் பழனி வழியே திண்டுக்கல்- கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கு முடிவு செய்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சேவை 5 நாட்களுக்கு இயக்கப்படும். அதன்படி மதுரையிலிருந்து காலை 10 மணிக்கு புறப்படும் ரயில் சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக பகல் 12:30 மணிக்கு பழனியை வந்தடையும்.

அதன்பின் பழனியில் இருந்து மதியம் 2:30 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 5 மணி அளவில் மதுரையை சென்றடைகிறது. இதேபோன்று கோவையில் இருந்து காலை 9:20 மணிக்கு புறப்படும் ரயில் பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் வழியாக காலை 11:38 மணிக்கு பழனியை வந்தடைகிறது. அதன் பிறகு பழனியில் இருந்து காலை 11:43 மணிக்கு புறப்படும் ரயில் ஒட்டன்சத்திரம் வழியாக மதியம் 1 மணிக்கு திண்டுக்கல்லை வந்து அடைகிறது. மேலும் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 2:55 மணிக்கு பழனியை வந்தடையும். பழனியில் இருந்து 3 மணி அளவில் புறப்படும் ரயில் உடுமலை, பொள்ளாச்சி வழியாக மாலை 5:30 மணிக்கு கோவையை சென்றடைகிறது.