மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள கிர்காட்வாடி பகுதியில், தெருநாய்கள் கூட்டமாகச் சேர்ந்து ஒரு சிறுவனைத் தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனேவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பள்ளி சீருடையில் இருந்த சிறுவன் ஒருவன், தனது குடியிருப்பு வளாகத்திற்குள் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த தெருநாய்கள் கூட்டம் திடீரென அச்சிறுவனைச் சூழ்ந்து கொண்டு துரத்தத் தொடங்கின‌

நாய்கள் துரத்தியதால் அதிர்ச்சியடைந்த சிறுவன், அங்கிருந்து தப்பிக்க ஓடும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தான். நாய்கள் அவனை நெருங்கி கடிக்க முயன்ற அந்த இக்கட்டான நேரத்தில், அவ்வழியாகச் சென்ற ஒருவர் இதைக் கவனித்து உடனடியாக ஓடி வந்து சிறுவனை மீட்டார். அவர் சரியான நேரத்தில் தலையிடவில்லை எனில், சிறுவன் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருப்பான் என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

குடியிருப்புப் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து பொதுமக்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர்.

தெருநாய் கடி மற்றும் வெறிநாய் கடி (Rabies) ஆபத்து அதிகரித்து வருவதால், குழந்தைகளை வெளியே அனுப்பவே பெற்றோர் அஞ்சுகின்றனர்.

இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும், முறையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உள்ளூர் அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது .