சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட சாலை அதாவது பறக்கும் சாலை அமைப்பதற்கான திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சாலையின்  15 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியைப் பொறுப்பை ஏற்றவுடன் பறக்கும் சாலை திட்ட பணிகளானது முடங்கியது. அதன்பிறகு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது திமுக எம்பி டி.ஆர் பாலு பறக்கும் சாலை திட்டம் குறித்து சில கேள்விகளை கேட்ட நிலையில், மத்திய மந்திரி நிதின் கட்காரி அதற்கு விளக்கம் அளித்தார்.

அவர் சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயில் வரை பறக்கும் சாலை திட்டமானது சில மாறுதல்களுடன் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதன்படி சாலையானது 2 அடுக்குகளாக 20.565 கிலோமீட்டர் தூரத்திற்கு 5,611.70 நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், அடுத்த வருடம் பணிகள் தொடங்கப்படும். இந்த பணிகள் தொடங்கிய அடுத்த 30 மாதங்களில் பறக்கும் சாலை பணிகள் முழுவதுமாக முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்று கூறினார்.

இந்நிலையில் பறக்கும் சாலை திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்துள்ளது. இந்த திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இந்திய கடற்படை, தமிழ்நாடு அரசு ஆகிய மூன்றும் சேர்ந்து செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்த திட்டத்திற்கு தற்போது மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதால் இனி பறக்கும் சாலை திட்ட பணிகள் விரைவாக நடைபெறும் என்றும் 2024-ஆம் ஆண்டுக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பறக்கும் சாலை திட்டம்  பயன்பாட்டுக்கு வந்து விட்டால் சென்னை மாநகரில் பெரும்பாலான போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.