சென்னை போரூர் அடுத்த மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக அலுவலக இமெயிலுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மாங்காடு போலீசில் அளித்த புகாரை அடுத்து,ஆவடி மாநகர போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் இருந்து சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனால் பள்ளி வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது. கடந்த மாதம் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவத்தை தொடர்ந்து, தற்போது மீண்டும் தனியார் பள்ளிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.