டெல்லியில் நேற்று நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சாலை விபத்தில், மேம்பாலத்தில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ரயில் தண்டவாளத்தில் நேரடியாக விழுந்தது. இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் சுமார் ஒரு மணி நேரம் இடையூறுக்குள்ளானது. இந்த சம்பவம் முகர்பா சவுக்கில் அமைந்துள்ள மேம்பாலத்தில் நடந்தது. அதிவேகமாக சென்ற கார், மேம்பாலத்தில் சென்ற ஒரு பைக்கில் மோதியதும், இரு வாகனங்களும் தண்டவாளத்தில் கீழே விழுந்தன. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் காயமடைந்தார்.

விபத்து நடந்த போது அந்த தண்டவாளத்தில் எந்த ரயிலும் செல்லாதது, பெரும் உயிரிழப்புகளைத் தவிர்த்ததற்கான காரணமாக அமைந்தது. விழுந்த காரால் தண்டவாளத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், அது உடனடியாக சரிசெய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், உள்ளூர்வாசிகளுடன் இணைந்து, தண்டவாளத்தில் சிக்கிய காரை கிரேன் உதவியுடன் வெளியே எடுத்தனர். அதன் பின்னர் ரயில் சேவைகள் தொடர்ந்தது.

 

மேலும் விபத்தின் வீடியோ காட்சிகள், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அதில், காரை தண்டவாளத்திலிருந்து அகற்றும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.