புனிதமான கங்கை நதியில் நீராடினால் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பலரது நம்பிக்கை. ஆனால், அந்த நம்பிக்கையை ஒரு வாயில்லா ஜீவன் மீது திணித்து ஒரு நபர் செய்த காரியம் இப்போது இணையத்தில் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் ஒரு சிறிய நாய்க்குட்டியை கங்கை நதியில் வலுக்கட்டாயமாகப் பிடித்து பலமுறை தண்ணீருக்குள் முக்கி எடுக்கிறார்.

அந்த நாய் குட்டி தண்ணீருக்குள் செல்ல பயந்து, அங்கிருந்து தப்பிக்கத் துடிப்பதும், அந்த நபர் அதை விடாமல் மீண்டும் மீண்டும் மூழ்கடிப்பதும் பார்ப்பவர்களின் நெஞ்சைக் கனக்க வைக்கிறது.

“நம் நாட்டில் கங்கையில் குளித்தால் துன்பங்கள் தீரும், அதனால் தான் இந்த நாய்க்குட்டிக்கும் கங்கையில் குளியல் போட்டேன்” என அந்த நபர் பதிவிட்டுள்ளார். ஆனால், இதை விலங்கு வதை எனச் சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் அந்த நபரை வறுத்து எடுத்து வருகின்றனர்.

“நாய்க்கு எந்தச் சடங்கும் தெரியாது, அதுக்குத் தெரிஞ்சதெல்லாம் பயம் மட்டும்தான், அந்த நபரைக் கைது செய்ய வேண்டும்” எனப் பலரும் ஆவேசமாக கமெண்ட் செய்து வருகின்றனர். புனித நதியில் நடந்த இந்த மனிதாபிமானமற்ற செயல் இப்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.