ஆந்திரப் பிரதேசத்தின் ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த வியாழக்கிழமை இரவு டெல்லி – சென்னை கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் ரயிலின் மீது திடீரென கற்கள் மற்றும் கனமான பொருட்களை வீசி கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ரயிலின் முன் எஞ்சின் கண்ணாடி முற்றிலும் நொறுங்கியது.

இதில், எஞ்சின் கேபினுக்குள் பணியில் இருந்த சீனியர் அசிஸ்டெண்ட் லோகோ பைலட் எம்.ஜெயராம் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார். கண்ணாடித் துண்டுகள் சிதறி, கடுமையான காயமடைந்த நிலையிலும், பயணிகளின் பாதுகாப்பைக் கருதி லோகோ பைலட்டுகள் ரயிலை நிறுத்தாமல் பத்திரமாக ஓட்டிச் சென்று உலவப்பாடு ரயில் நிலையத்தில் நிறுத்தினர்.

<a href="http://

“>

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, எஞ்சினுக்குள் ரத்தக் காயங்களுடன் லோகோ பைலட் அமர்ந்திருக்கும் பதறவைக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க ரயில்வே போலீசாரும், உள்ளூர் போலீசாரும் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.